பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வடமேற்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்கிறார்
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், ஜோன் ரான்கின், வட மேற்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு மே, 27-29 வரை ஒரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். உயர் ஸ்தானிகர் குருணாகல், அநுராதபுரம், மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தார்.
“வெவ்வேறுபட்ட வணக்க ஸ்தலங்களுக்கு சென்று என் வணக்கங்களைத் தெரிவிப்பது எனது விஜயத்தின் பிரதான ஒரு அம்சமாகவிருந்தது” என்று உயர் ஸ்தானிகர் கூறினார். “நான் அநுராதபுரத்தில் புனித ஸ்ரீ மகா போதி மற்றும் ரூவன்வெலிசாய ஸ்தூபங்கள், மன்னாரில் வரலாற்றுச் சிறப்பு கொண்ட மடு தேவாலயம், திருக்கேதீஸ்வரம் கோவில் மற்றும் புத்தளத்தில் பெரிய பள்ளிவாசல் என்பவற்றுக்கு விஜயம் செய்தேன். இந்த ஒவ்வொரு வணக்க ஸ்தலங்களிலும், சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் சமூகத் தொடர்புகள் பற்றி மதத் தலைவர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்களை நான் நடாத்தினேன். ஒவ்வொன்றும் மற்றொன்றின் கொண்டாட்டங்களில் பங்குபற்றும், அத்தகையதொரு பன்மைத்துவ நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூகங்களைக் கொண்டிருப்பதற்கு இலங்கை பாக்கியம் செய்துள்ளது. நான் பேசிய அனைவருமே தங்களது கரிசனைகளையும் மற்றும் மதத் தீவிரவாதத்துக்கு எதிரான அவர்களது நிலையையும் தெளிவுபடுத்தினர். கடந்த காலங்களின் காயங்களைக் குணப்படுத்துவதில் அவை ஒரு முக்கிய பாகத்தை வகிக்கலாமென்பதால், இலங்கையின் மத சகவாழ்வின் பாரம்பரியங்கள் குறிப்பாக இன்று முக்கியமானவை எனும் எனது கருத்தை இந்த விஜயம் மீள்வலியுறுத்தியது.
“உள்ளூர் அரச சார்பற்ற ஸ்தாபனங்கள், உள்ளக இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் பெண்கள் குழு உட்பட வேறுபட்ட சமூகங்களையும் கூட நான் சந்தித்தேன். அவர்கள் தங்களது பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாகப் பேசினர். அவர்களது கதைகள் வெவ்வேறானவை, ஆனாலும் காணி, தங்களது சொந்த மொழியில் பொதுச் சேவைகளுக்கான வழிமுறைகள் மற்றும் வீட்டு வன்முறைகள் போன்ற சமூகப் பிரச்சினைகள் என்பன அடிக்கடி எடுத்துரைக்கப்பட்ட விடயங்களாக இருந்தன. நல்லிணக்கம், பொலிஸ் பயிற்சி, மொழியுரிமைகளுக்காக ஆதரித்து வாதாடுதல், ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான ஆதரவு உட்பட, இந்தப் பிரதேசங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் செயல்திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் உதவும்”என்றார் அவர்.
உயர் ஸ்தானிகர் வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் ஆகியோர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைக் கொண்டிருந்ததுடன் அநுராதபுரத்தில் நுவரவாவி நீர்த்தேக்கத்திற்கும் மற்றும் நீர்கொழும்பில் பொலிஸ் அக்கடமிக்கும் விஜயம் செய்தார்.