குழும அறிக்கை

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான அறிக்கை 2013 வெளியிடப்பட்டது

பிரித்தானிய அரசாங்கத்தின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான வருடாந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது

ஆவணங்கள்

Human rights in Countries of Concern: Sri Lanka

அணுகக்கூடிய வடிவத்தைக் கோருக.
உதவிகரமான தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்தினால் (திரை வாசிப்பான் போன்றவை), இந்த ஆவணத்தின் மேலும் அணுகக்கூடிய வடிவம் தேவையெனில், தயவுசெய்து fcdo.correspondence@fcdo.gov.uk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். எந்த வடிவம் உங்களுக்குத் தேவை என்று தயவுசெய்து கூறவும். நீங்கள் எந்த உதவக்கூடிய தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூறினால் அது எங்களுக்கு உதவியாய் இருக்கும்.

விபரங்கள்

இலங்கை உட்பட, கரிசனத்துக்குரிய 15 நாடுகளின் மீதான விசேட கவனத்துடன், உலகம் முழுவதிலுமான மனித உரிமைகள் நிலைமைகளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அறிக்கையிலுள்ள ஒரு தனியான அத்தியாயம் 2013 இன் போது இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமைகளின் விபரங்களைத் தருகின்றது. அந்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கை

2013இல் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தீவிர கரிசனைக்குரியவையாக இருந்தன. உட்கட்டு மானங்களின் மீள் நிர்மாணம் மற்றும் நாட்டின் வடக்கில் தேர்தல்கள் முதல் தடவையாக நிகழ்ந்தமை போன்ற மோதல்களுக்குப் பிந்திய விடயங்களில் முன்னேற்றங்கள் தொடர்ந்த போதிலும், ஒரு முழுமையான போக்கு பல அம்சங்களில் எதிர்மறையானதாகவே இருந்தது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன என்பதோடு பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான சுயாதீன சுட்டிகளில் இலங்கை வீழ்ச்சி கண்ட.து. பிரதம நீதியரசர் மீதான அரசியல் குற்றச்சாட்டு, ஒரு குற்றவிலக்களிப்பு கலாச்சாரம் மற்றும் சில நிறுவனங்களின் சுயாதீனம் சீரழிந்துள்ள அளவு பற்றிய கரினைகளை மோசமாக்கியது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர், நவிபிள்ளை, ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தும், மற்றும் பல முன்னேற்றங்களை, இனங் கண்ட அதே சமயம், தொடர்ச்சியான மனித உரிமைகளின் மீறல்கள் மற்றும் ஒரு “அதிகரித்தளவிற்கு சர்வாதிகாரத் திசையை” நோக்கி அரசாங்கம் நகர்கின்றமைக்கான அறிகுறிகளையும் அவதானித்தார்.
நவெம்பர் 2013 இல், இலங்கை பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டை நடாத்தியது, அதில் பிரதம மந்திரி, வெளியுறவுத்துறைச் செயலர், மற்றும் இலங்கைக்கான அமைச்சர் ஹூகோ ஸ்வயர் ஆகியோர் கலந்து கொண்டனர். தனது விஜயத்தின் போது, மார்ச் 2014 அளவில் இலங்கை ஒரு நம்பகத்தன்மை கொண்ட, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணைச் செயன்முறையை ஏற்படுத்தத் தவறின், இராணுவ மோதலின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் மீது ஒரு சுயாதீனமான சர்வதேசப் புலன் விசாரணையை ஸ்தாபிப்பதற்கு நவிப்பிள்ளை அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதர வளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய இராச்சியம் அதன் நிலைப்பாட்டை உபயோகிக்கும் என, பிரதம மந்திரி கூறினார். 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து வட மாகாணத்திற்கு சென்ற முதலாவது வெளிநாட்டு அரசாங்கத் தலைவராக பிரதம மந்திரி திகழ்ந்தார். யாழ்ப்பாணத்திற்கு அவருடன் பிபிசி, ஐரிவி, ஸ்கை மற்றும் சனல் 4 போன்ற ஊடக ஸ்தாபனங்களும் சென்றிருந்தன, அவை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது மனித உரிமைகள் மற்றும் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் அதிகரித்த ஆராய்தல்களுக்கு பங்களித்தன. வெளியுறவுத்துறைச் செயலர் மற்றும் திரு. ஸ்வயர் ஆகியோர் பல்வேறுபட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களை சந்தித்தனர்.

அனைத்து யுத்தக் குற்றங்களுக்குமான பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மதித்தல், மற்றும் ஒரு அரசியல் தீர்வு என்பவற்றை இலங்கையில் மோதல்களுக்கு பிந்திய நல்லிணக்கத்திற்கு அத்தியா வசியமான அம்சங்களாக ஐக்கிய இராச்சியம் காண்கிறது. இலங்கை ஒரு நம்பகத்தன்மையான உள்நாட்டுச் செயன்முறையை ஸ்தாபிக்காவிட்டால், மார்ச் 2014 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கை கவனத்திற்கு கொள்ளப்படுமென்பதோடு, அங்கு ஒரு சர்வதேசப் புலன் விசாரணைக்கான எங்களது வேண்டுகோளுக்கு ஆதரவளிப்பதற்கு சபையின் உறுப்பு நாடுகளை நாங்கள் வலியுறுத்தி வேண்டிக் கொள்வோம். கடுமையான மனித உரிமைகள் விடயங்கள் மீது கவனம் செலுத்துவதற்கும் மற்றும் கருத்துச் சுதந்திரம், பெண்கள் உரிமைகள், தேர்தல் நடைமுறைகள் மற்றும் சட்டவாட்சி என்பவற்றை மேம்படுத்துவதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் ஐக்கிய இராச்சியம் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தும். மாநாட்டின் போது, அமைச்சர்கள் சந்தித்த மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் உறுப்பினர்கள் ஆகியோர், எந்தவொரு பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் முகங் கொடுத்தலாகாது, என நாம் இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளதுடன், இந்த நிலைமையை கூர்மையாக தொடர்ந்து கண்காணிப்போம்.

நவெம்பர் 2013 இல் இலங்கைக்கான அவரது விஜயத்தின் போது, பிரதம மந்திரி டேவிட் கம்ரென் யாழ்ப்பாணத்தில் தமிழ் குடியிருப்பாளர்களுடன் பேசுகிறார்.

தேர்தல்கள்

ஒன்பது மாகாணசபைகளின் மூன்றுக்கு 148 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. 1987 இல் மாகாணசபைகள் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து வடக்கில் நடைபெற்ற முதலாவது மாகாணசபைத் தேர்தல் இதுவாகும். வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) 80% வாக்குகளை வென்ற அதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பு மத்திய மற்றும் வடமேல் மாகாணங்ளைத் தக்க வைத்துக் கொண்டது. மிரட்டுதல், தொல்லைப்படுத்தல் மற்றும் அரச வளங்களின் துஷ்பிரயோகம் உட்பட, தேர்தலில் நிற்பதில் தேர்தல் சட்டத்தின் வன்முறைகள் மற்றும் மீறல்கள் என்பவற்றின் சம்பவங்கள் இருந்த போதிலும், தேர்தல் தினம் பொதுவில் அமைதியாக இருந்தது. உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் “ஒப்பீட்டளவில் வன்முறைகளிலிருந்து சுதந்திரமானதாக இருந்தாலும், மிரட்டுதல்களிலிருந்து அல்ல”, என்பதைக் குறிப்பிட்டனர். வடக்கிலான தேர்தல்களின் மிரட்டுதல்களில் இராணுவத்தின் ஈடுபாடு இருந்தமை குறித்தான அறிக்கைகள் தொடர்பில் பொது நலவாயத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கரிசனைகளை வெளிப்படுத்தினர். ஐக்கிய இராச்சியம் தேர்தல்கள் நடாத்தியதை வரவேற்றதுடன் தேர்தல் கண்காணித்தலுக்கு நிதியளிப்பதற்கும் உதவியது. பிரதம மந்திரி பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டின் போது யாழ்ப்பாணத்துக்கான அவரது விஜயத்தில் வட மாகாண முதலமைச்சரைச் சந்தித்தார். வடக்கில் தேர்தல்களை நடாத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை அவர் வரவேற்றதுடன் சிறுபான்மைத் தமிழர்களுடன் ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வுக்கு இணங்கிக் கொள்வதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பேச்சு மற்றும் ஒன்று கூடுவதற்குமான சுதந்திரம்

பேச்சு மற்றும் ஒன்றுகூடுவதற்குமான சுதந்திரம் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டதுடன், சுய தணிக்கை பொதுவான அம்சமாக இருந்தது. சம்பவங்கள் பல கரிசனைக்குரியவையாக இருந்தன. கொழும்பைத் தளமாகக் கொண்ட ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் மரண அச்சுறுத்தல்கள் மற்றும் அவரது வீட்டின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து செப்டெம்பரில் நாட்டை விட்டு வெளியேறினார். பெப்ரெவரியில், ஒரு பௌத்த அடிப்படை வாதிகளின் ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிட்டுக் கொண்டிருந்த பிபிசி குழுவினர் ஒரு பௌத்த தீவிரவாத கூட்டத்தால் அச்சுறுத்தப்பட்டனர். மார்ச் 26 அன்று, பிபிசி உலக சேவை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தாலான தமிழ் நிகழ்ச்சியில் “இலக்கு வைத்த குறுக்கீடுகள்” எனக் காரணம் குறிப்பிட்டு தமிழ் மொழியிலான அதன் மீள் ஒலிபரப்பை இடைநிறுத்தியது. அச்சேவை அதன் பின் இன்னமும் மீள ஆரம்பிக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன் செய்திப் பத்திரிகைக்கு விஜயம் செய்த போது பிரதம மந்திரி கண்டவாறு, வடக்கில் ஊடகங்களுக்கான நிலைமை கடினமானதாகவே இருந்தது. 2013 இன் முற்பகுதிகளில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் தமிழ் பத்திரிகையின் விநியோக ஊழியர்கள் தாக்கப்பட்டிருந்த வேளையில், ஜூலை 10 ஆம் திகதி ஒரு இனந்தெரியாத குழுவினால் உதயன் பத்திரிகையின் ஒரு செய்தியாளர் தாக்கப்பட்டார். உதயன் பத்திரிகை தமிழ் சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் ஒரு எரியூட்டல் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தது. வடக்கு ஊடகவியலாளர்கள் பலர் தொல்லைகளுக்கு உள்ளாகுவதாக தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக வெற்றிகரமான கையில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அதிகாரிகள் இது வரை தவறியுள்ளனர்.

மே 30, அன்று அரசாங்கத்துக்கு எதிரான ஒரு செய்திப் பத்திரிகையின் ஆசிரியரைக் கடத்துவதற்கான முயற்சி தோல்வியடைந்திருந்ததுடன், அரசாங்கத்துக்கு எதிரான ஒரு முஸ்லிம் அரசியல்வாதி இந்தியாவில் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்த கருத்துகளுக்காக ஒரு சிறிது காலம் தடுத்து வைக்கப் பட்டிருந்தார். ஊடகவியலாளர்ளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட, செயற்பாட்டாளர்கள், இலங்கையின் “நற்பெயரைப்” பாதிக்கும் விடயங்கள் உட்பட, அறிக்கைப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்தியிருக்கக் கூடிய ஒரு ஊடக ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து கரிசனைகளை எழுப்பினர். அந்தக் கோவை முறைசார்ந்த வகையில் அறிமுகப்படுத்தப்படாததினால் சட்டமாக வர மாட்டாது என ஊடக அமைச்சர் கூறினார், ஆனால் இதனோடு இணங்காமை மூலமாக ஏற்படும் விளைவுகள் தெளிவற்றதாக இருந்தன. ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடனும், அதே போன்று இலங்கையின் சர்வதேசக் காலாந்த மீளாய்வின் (UPR) ஏற்றுக் கொள்ளலின் போதும் ஐக்கிய இராச்சியம் கரிசனைகளை எழுப்பியது. அத்தோடு ஒன்று கூடுதலுக்கான சுதந்திரம் தொடர்பாகவும் பல சம்பவங்கள் இருந்தன. மார்ச் 5 ஆம் திகதியன்று, ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் மனுவொன்றைக் கொடுப்பதற்காக காணாமற் போனவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கொழும்புக்கு பயணிப்பதை பொலிஸ் தடுத்தது. ஏப்பிரலில், மத ரீதியாக தூண்டப்பட்ட பகையுணர்வுப் பிரச்சாரங்களுக்கு எதிரான ஒரு அமைதியான விழிப்புப் போராட்டம் பொலிசாரினால் கலைக்கப்பட்டதுடன், பல செயற்பாட்டாளர்கள் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டனர். ஆகஸ்டில், ஒரு புறநகரிலான ஆர்ப்பாட்டத்தின் மீதான இராணுவ அடக்குதலின் ஒரு விளைவாக மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள் தொடர்பாக ஐக்கிய இராச்சியம் கடுமையான கரிசனங்களை எழுப்பியதுடன், ஒரு புலன்விசாரணைக்கும் கோரிக்கை விடுத்தது. நவெம்பர் 13 அன்று, மனித உரிமைகள் விழாவொன்றில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு பிரயாணிப்பதிலிருந்து காணாமற்போனவர்களின் உறவினர்கள் பாதுகாப்புப் படைகளால் மீண்டும் தடுக்கப்பட்டனர். நவெம்பர் 14ஆம் திகதி, அந்த விழா அரசாங்கத்துக்கு சார்பான ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டது. நவெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் என்பவற்றைத் தடைசெய்யும் ஒரு நீதிமன்ற உத்தரவை பொலிஸ் பெற்றுக்கொண்டமை, மனித உரிமைப் பாதுகாவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மெழுகுவர்த்தி விழிப்புப் போராட்டத்தை இரத்துச் செய்ய வைத்தது. பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டின் போது, பிரித்தானிய சனல் 4 இன் ஒரு பிரிவு, அதிகரித்தளவிலான மிரட்டல்கள் மற்றும் கண்காணித்தல்களைக் குறிப்பிட்டு, தங்களது விஜயத்தை குறுக்கிக் கொள்வதற்குத் தீர்மானித்தது. டிசம்பர் 10ஆம் திகதியன்று, கிழக்கத்தைய நகரம் திருகோணமலையில் காணாமற்போனவர்களின் குடும்பங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தின ஊர்வல நிகழ்வு இனந்தெரியாத முகமூடி அணிந்த ஆட்களால் தாக்கப்பட்டது.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் (HRDs)

மனித உரிமைப் பாதுகாவலர்கள் இலங்கையில் செயற்படுவதற்கான சூழ்நிலை கடினமானதாகவே இருந்தது. முன்னணி மனித உரிமைப் பாதுகாவலர்கள் அரசாங்க உறுப்பினர்களிடமிருந்து பகிரங்கமான கண்டனங்களுக்கு தொடர்ச்சியாக முகங் கொடுத்ததுடன், அரசினால் நடாத்தப்படும் ஊடகங்களினால் “துரோகிகள்” எனக் காண்பிக்கப்பட்டனர். தங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது மரண அச்சுறுத்தல்களைப் பெறுவது உட்பட, செயற்பாட்டாளர்கள் மிரட்டல்களுக்கு உள்ளாகினர். பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை ஒட்டியும் மற்றும் நவி பிள்ளையின் விஜயத்தின் போதும் இரண்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மரண அச்சுறுத்தல்களைப் பெற்றதின் பின்னர் ஒருவர் ஒளிந்து தலைமறைவாகியுள்ளார்.

ஊடக செயற்பாட்டாளர்கள், காணாமற்போனவர்களின் குடும்பங்கள், சித்திரவதையைத் தடைசெய்தல் மீது பணியாற்றுபவர்கள், மற்றும் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உட்பட, இலங்கையின் ஒரு பல்வேறு தரப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆகியோர்களை வெளியிறவுத்துறைச் செயலரும் மற்றும் திரு. ஸ்வயரும் சந்தித்தனர். 2008 இல் டிரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனலின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரின் வீட்டின் மீதான கைக்குண்டுத் தாக்குதல்; 2009 இல் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை; மனித உரிமைப் பாதுகாவலர்களான சாந்தக்குமார் மற்றும் ஸ்டீபன் சுந்தர்ராஜ் ஆகியோரின் காணாமற்போதல்கள்; 2010 இல் கேலிச்சித்திரம் வரைகின்ற பிரகீத் எக்னலிகொட; மற்றும் 2011 இல் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரகர்கள் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் ஆகியோர்களின் காணமற்போதல்கள் உட்பட, கடந்த கால சம்பவங்களின் புலன்விசாரணைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. அரச சார்பற்ற ஸ்தாபனங்கள் நாட்டில் அவர்களது செயற்பாடுகள் மீது அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து கரிசனைகளை வெளிப்படுத்தின. மாற்றுக் கருத்துக்களை அடக்கியொடுக்குவது தீவிரமடைகிறது என சர்வதேச மன்னிப்பு சபை இலங்கையைக் குற்றஞ் சுமத்தியது. செப்டெம்பரில், நவிப் பிள்ளை, இலங்கையில் “மனித உரிமைப் பாதுகாவலர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது உயர்ந்த அளவிலான தொல்லைப்படுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் தொடர்வது பற்றிய முறைப்பாடுகளை தான் கேட்டதாக” குறிப்பிட்டார்.

நீதி மற்றும் சட்டவாட்சிக்கான வழிமுறைகள்

ஜனவரியில், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்குவதற்கு இலங்கை ஜனாதிபதி இணங்கினார். இலங்கையின் உயர் நீதிமன்றம் அரசியல் குற்றச்சாட்டு அரசியலமைப்புக்கு விரோதமானது என தீர்மானித்ததுடன், சர்வதேச நீதியாளர்கள் சபை, ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச வழக்குரைஞர்கள் சங்கம் உட்பட, சர்வதேசச் செயற்பாட்டாளர்கள் இச்செயன்முறை பற்றி கரிசனைகளை எழுப்பினர். பெப்ரெவரியில், சர்வதேச நெருக்கடிக் குழு நீதித்துறை மற்றும் அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துகள் மீதான தாக்குதல்கள் குறித்து “வேகம் முடுக்கி விடப்பட்ட இலங்கையின் எதேச்சாதிகாரப்போக்கு”, என கரிசனைகளை வெளிப்படுத்தியது. இலங்கை “அதிகரித்தளவிற்கு சர்வாதிகாரத் தன்மை கொண்டதாகின்றது” என நவிப்பிள்ளை கரிசனையை எதிரொலித்ததுடன் “சட்டவாட்சி மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் எந்தளவிற்கு நாசமடைந்தும் மற்றும் சீரழிந்துள்ளது என்பது…..கவலையளிக்கிறது” எனக் குறிப்பிட்டார். சர்வதேச வழக்குரைஞர்கள் சங்கத்தின் மனித உரிமைகள் நிலையம் அரசியல் குற்றச்சாட்டு குறித்து புலன்விசாரணை செய்வதற்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு திட்டமிட்டது, ஆனாலும் அதற்கான நுழைவிசைவு மறுக்கப்பட்டது. அந்த சமயத்தில் இலங்கைக்கான அமைச்சர், அலிஸ்ரர் பேர்ட், “இத்தகைய நடவடிக்கைகள், மேலும் கூர்ந்தாராய்தல் செயன்முறைகளுக்கு தடையாக அமையும் என்று சொல்லப்படுபவற்றுக்கு நம்பிக்கை அளிக்க மாட்டாது” என்று கூறினார். இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் ஒரு மையப்படுத்திய. விரிவான தரவுத்தளம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் 1,628 பேர்கள் மீதான புலன்விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, மே மாதத்தில் தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், இந்தத் தரவுத்தளம் சுதந்திரமாக அணுகப் படக்கூடியதாக இல்லையெனத் தெரிவிக்கின்றனர். ஆகஸ்டில், இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையான, பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையிலிருந்து சட்டமும் ஒழுங்கும் என்ற ஒரு புதிய அமைச்சுக்கு மாற்றுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இரண்டு அமைச்சுகளுமே ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன. ஆகஸ்டில், 1990 இலிருந்து 2009 வரையான காணாமற்போனதல்களைப் புலன்விசாரணை செய்வதற்கு, காணாமற்போனவர்கள் மீதான ஒரு விசாரணை ஆணைக்குழுவையும் இலங்கை அரசாங்கம் நியமித்தது. “ இந்த சம்பவங்களைத் தீர்ப்பதற்கான எந்த புதிய முயற்சியும் வரவேற்கப்படுகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக…… இந்த ஆணைக்குழுவின் விசாரணை எல்லைக்குள் வராத ஏனைய பகுதிகளிலிருந்து…..பல ‘வெள்ளை வான்’ காணமற்போதல் சம்பவங்கள் முறையிடப்பட்டுள்ளன”, என நவிப் பிள்ளை குறிப்பிட்டார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது, திரு. ஸ்வயர் காணாமற்போனவர்களின் குடும்பங்கள் சிலவற்றை சந்தித்து அவர்களது கரிசனைளை கேட்டார். பலவந்தமான அல்லது தன்னிச்சையில்லாத காணாமற்போனவர்கள் மீதான செயற்குழு உட்பட, ஐக்கிய நாடுகளின் விசேட ஆணை கொண்ட ஏனையவர்களால், வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலுவையிலுள்ள விஜயங்களுக்கு வசதியளிப்பதற்கு அழைப்புகளை மேலும் நீடிப்பதற்கு கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்களின் தலைமைகள் இலங்கை அரசாங்கத்தை ஊக்குவித்தன. 2006 இல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு மீளவும் ஆரம்பிக்கப்பட்ட போது புலன்விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதுடன், பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர்கள் கைது செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், அனைத்து பன்னிரெண்டு பேர்களும் ஒக்டோபர் மாதத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜை குராம் ஷாயிக்கின் வழக்கு விடயம் பிரதம மந்திரியால் அவரது விஜயத்தின் போது எழுப்பப்பட்டது, ஆனாலும் அந்த வருடத்தின் இறுதி வரை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

மரண தண்டனை

இலங்கை 1976 இலிருந்து மரண தண்டனை தொடர்பாக ஒரு உண்மையான சட்ட இணக்கத் தாமதத்தை பேணியது. சிறையிலுள்ள 424 கைதிகளின் மரண தண்டனைகளை ஆயுட் தண்டனைகளாக மாற்றுவதன் சாத்தியத்தை அறிவதற்கு இலங்கை அரசாங்கம் ஒரு குழுவை நியமித்துள்ளது.

சித்திரவதை

2011 இன் தேசிய நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸ் காவலின் போது சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் உள்ளன, இதன் மீது கவனம் செலுத்துவதற்கு சட்டவாக்கம் அறிமுகப்படுத்தப்படவில்லை. 2013 இன் போது, பொலிஸ் காவலிலுள்ள போது ஏற்படுகின்ற இறப்புகள் பற்றி சிவில் சமூகம் கரிசனையை வெளிப்படுத்தியது. குறிப்பாக பொலிசார் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களின் போது சந்தேக நபர்கள், மர்மான நிலைமைகளின் கீழ் இறந்த சம்பவங்களில் இறந்தமைக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என, வெள்ளிக்கிழமை அமைப்பு எனப்படும் சிவில் சமூக ஸ்தாபனம் குறிப்பிட்டது. டிசம்பரில், பொதுநலவாய செயலகத்தின் உதவியுடன் ஏற்படுத்தப்படவிருந்த சித்திரவதை தொடர்பான திட்டமிட்ட விசாரணைகளைப் பிற்போடுவதாக இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தது..

மோதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு

மோதல்களின் பிந்திய மீள்நிர்மாணம், உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் மீள்திரும்புதல்கள் மற்றும் கண்ணி வெடிகள் அகற்றல் என்பவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயலாற்றுகிறது, ஆனாலும் முக்கியமான சவால்கள் இன்னமும் உள்ளன. இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ் புலிகள் ஆகிய இரு தரப்புகளாலும் புரியப்பட்ட யுத்தக் குற்ற குற்றச்சாட்டுகள் மீதான பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச கவனம் தொடர்ச்சியாக உள்ளது. மார்ச் 2014 அளவில் இலங்கை ஒரு நம்பகத்தன்மை கொண்ட, வெளிப் படையான மற்றும் சுயாதீனமான விசாரணைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்கு தவறின், ஒரு சுயாதீனமான சர்வதேசப் புலன்விசாரணையை ஸ்தாபிப்பதற்கு நவிப்பிள்ளை அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய இராச்சியம் அதன் நிலைப்பாட்டை உபயோகிக்கும் என, பிரதம மந்திரி கூறினார். உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் மீள்திரும்புதல்கள் மற்றும் பௌதிக மீள்நிர்மாணங்கள் தொடர்பிலான முன்னேற்றங்களை நவிப்பிள்ளை அங்கீகரித்ததுடன் பௌதிக மீள்நிர்மாணங்கள் மட்டும் நல்லிணக்கம், கௌரவம் அல்லது நிலையான சமாதானத்தைக் கொண்டு வர மாட்டாது என்பதையும் அவர் குறிப்பிட்டார். பொறுப்புக்கூறல், இராணுவ மயமாக்கல் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உட்பட ஒரு தொகையான விடயங்கள் பற்றி அவர் கரிசனைளை வெளிப்படுத்தினார். உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ஒக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்தார். “உட்கட்டுமானங்ளை மீள்கட்டுவதில் பாராட்டும்படியான நீண்ட முயற்சிகளை” நாட்டில் அவர் அவதானித்தார். அத்தோடு, மீள்குடியமர்வதற்கும் மற்றும் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் சொத்துரிமைகளை அப்பியாசிப்பதற்கும், காணாமற்போன குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் சட்டச் சேவைகளுக்கான வழிமுறைகளை அனுமதிக்கும் ஒரு சுற்றாடலை உருவாக்குவதன் முக்கியத்து வத்தையும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் போது அவர்களது நடத்தைகளுக்காக இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை புலன் விசாரணை செய்வதற்கு ஒரு இராணுவ விசாரணை நீதிமன்றம் நியமிக்கட்டுள்ளதாக ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கு இராணுவம் ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்ததாக விசாரணையின் சாராம்சம் தெரிவித்தது, ஆனால் எதிர்காலத்தில் தவிர்க்க இயலாத சேதங்களை குறைப்பதற்கு அல்லது இல்லாது செய்வதற்கு இராணுவ தாக்குதல் செயற்பாடுகள் மீள்மதிப்பீடு செய்யப்படுவதற்கு அது பரிந்துரைத்தது. இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதன் நம்பகத்தன்மை பற்றி வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருந்த போதிலும், யுத்தக் குற்றங்களை சுமத்தும் சனல் 4 இன் காணொலிக் காட்சிகளிலுள்ள விடயங்ளை. தான் புலன்விசாரணை செய்வதாக மே மாதத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு இலங்கை உறுதியளித்தது, எவ்வாறாயினும், அங்கு ஒரு மெய்யான விசாரணை இருக்கவில்லை. காணாமற்போனவர்கள் மீதான அரசாங்கத்தின் ஒரு விசாரணை ஆணக்குழுவின் நியமனத்திற்கு மேலதிகமாக, “உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் சொத்துகளுக்கான சேதத்தைக் கணிப்பிடுவதற்கும்” கூட அரசாங்கம் ஒரு புள்ளிவிபரத்தை எடுத்தது. முன்னைய மோதல் வலயத்தில் காணி ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக தொடர்ந்தும் இருந்தது. பாதுகாப்பு படைகளால் பிடித்து வைத்திருக்கப்பட்ட பெரும் நிலப் பரப்புகள் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கப்பட்டு பொதுமக்கள் நடவடிக்கைகளுக்காக மீளளிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கே இராணுவத்தாலான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கருதப்படுபவைகளுக்காக காணிகளின் வஞ்சகமான, எதேச்சாதிகாரமான கையகப்படுத்தல்கள் உள்ளதென குற்றஞ் சாட்டியது.

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம்

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தது. ஜனவரியிலிருந்து ஜூலை வரை முஸ்லிம்களுக்கெதிராக 227 சம்பவங்களையும் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 60 சம்பவங்களையும், ஒரு உள்நாட்டு அரச சார்பற்ற ஸ்தாபனம் ஆவணப்படுத்தியது. தாக்குதல்கள் வன்முறைகள், நாசவேலை, தொல்லைப்படுத்தல், பகையைத் தூண்டும் பேச்சு மற்றும் சொத்துக்களை அபகரித்தல் தொடர்பான அறிக்கைளை அவை உள்ளடக்கியிருந்தன. தேசிய பெளத்த குழுக்களாலான அறிக்கைகள் கரிசனைகளை அதிகப்படுத்தின, உதாரணத்திற்கு, பொது பல சேனா, பெப்ரெவரியில் இலங்கை அரசாங்கம் “சிங்கள பௌத்தமாக தொடர்ந்துமிருத்தல் வேண்டும். இது ஒரு சிங்கள நாடு., சிங்கள அரசாங்கம். ஜனநாயக மற்றும் பன்மைத்துவ விழுமியங்கள் சிங்கள இனத்தைக் கொல்கின்றன”, எனத் தெரிவித்தது. ஆகஸ்ட் 11 ஆம் திகதியன்று கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் இரண்டு நாள் இரவு பொலிஸ் ஊரடங்கை உருவாக்கியது. மதங்களின் அமைதியான ஒரு சக தன்மையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கையை எடுப்பதற்கும், மற்றும் தாக்குதல் மீது புலன்விசாரணை மேற்கொண்டு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஐக்கிய இராச்சியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியது. கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகங்களின் தலைமைகள் தாக்குதல் மீதான தங்கள் கரிசனைகளை வெளிப்படுத்தியும் மற்றும் இவற்றுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகளை வலியுறுத்தியும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தாக்குதல் மீதான புலன்விசாரணைகளின்மை குறித்தான கரிசனைகள் தொடர்ந்து நீடித்தன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான தனது செப்டெம்பர் இற்றைப்படுத்தலில், நவிப்பிள்ளை, “அரசாங்கப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோர்கள் இந்தப் பிரச்சினையில் குறைந்த அக்கறை காண்பித்ததையும் அல்லது பழியை சிறுபான்மைச் சமூகங்கள் மீதே சுமத்தியதை” வருத்தத்துடன்I குறிப்பிட்டதுடன், “அரச அனுசரனை அல்லது தீவிரவாதக் குழுக்களுக்கான பாதுகாப்பு அளித்தல்” எனக் குறிப்பிட்டார்.”

பெண்களின் உரிமைகள்

உலகப் பொருளாதார அமைப்பின் உலகளாவிய பால்நிலை இடைவெளிக் குறிக்காட்டியில், இலங்கை 2012 இலான அதன் தரப்படுத்தல் ஸ்தானமான 39 இலிருந்து 2013 இல், 55 ஆவது இடத்திற்கு வீழ்ச்சி கண்டது. தனியே 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் (மொத்தத்தின் 5%), அரசாங்கத்திலான பெண்களின் பங்குபற்றுதல் குறைவானதாகவே தொடர்ந்துமிருந்தது. பாலியல் வல்லுறவு உட்பட, பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளின் அறிக்கையிடல்கள் ஒரு கடுமையான கரிசனைக்குரியவையாக தொடர்ந்தும் இருந்தன. பொது மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிகளவிற்கு கரிசனை கொண்டவர்களாக உள்ளனர் என ஒரு பொலிஸ் மதிப்பாய்வு தெரிவிக்கிறது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் பெண்களின் உரிமைகளும் ஒரு கரிசனைக்குரியவையாகவே தொடர்ந்தும் உள்ளன. இராணுவத்தால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் வல்லுறவு பற்றிய முறையிடல்கள் உட்பட, யுத்தத்தின் காரணமான 89,000க்கும் மேற்பட்ட விதவைகள் முகங் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்ந்தும் உள்ளன. பாதுகாப்பு படைகள் அந்தப் பகுதிகளைச் சுற்றி தளம் கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலில் இந்த முறையிடல்கள் பற்றிய கரிசனைகளை நாங்கள் எழுப்பினோம். சர்வதேச பெண்கள் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஆகியவற்றில் கொழும்பிலுள்ள எங்களது உயர் ஸ்தானிகராலயம் அறிக்கைளை வெளியிட்டது. வீட்டு வன் முறையில் பாதிக்கப் பட்டவர்களுடன் செயலாற்றும் மற்றும் பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உள்நாட்டு ஸ்தாபனத்துற்கு ஐக்கிய இராச்சியம் நிதியுதவி அளித்தது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கான விஜயத்தின் போது, வெளியுறவுத்துறைச் செயலர் பாலியல் ரீதியான வன்முறையைத் தடுக்கின்ற முன்னெடுப்பு தொடர்பில் அவரது உரையொன்றை ஆற்றினார். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகளில் நம்பகமான மற்றும் சுயாதீனமான புலன்விசாரணைகணை மேற் கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலான உதவி அளிக்கவும், மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் உறுதியான சட்டத்தை உருவாக்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தை அவர் வேண்டினார். பாலியல் ரீதியான வன்முறைகளை உலகளாவியளவில் முடிவுறுத்துவதற்கான சர்வதேசப் பிரச்சாரத்தில் இலங்கை இணைந்து கொள்வதை ஐக்கிய இராச்சியம் காண விரும்புகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுபான்மையினர் உரிமைகள்

இதன் பயன் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் இருந்தும், சிறுபான்மை தமிழ்ச் சமூகத்துடன் ஒரு அரசியல் தீர்வுக்காக அரசாங்கம் பிரேரணைகளை மேற்கொள்ளவில்லை. சிறுபான்மை கரிசனைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான கலந்துரையாடல் தொடர்ந்தும் ஸ்தம்பித நிலையிலேயே உள்ளது. மாகாண சபைகளை உருவாக்கிய 13 ஆவது திருத்தத்திற்கு சாத்தியமான மாற்றங்களை பிரேரிப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பாராளுமன்றத் தெரிவுக் குழு எதிர்க் கட்சிப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க வில்லை. சிறுபான்மையினருக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வை இயலச் செய்கின்ற நன்னம்பிக்கையான பேச்சுவார்த்தையை பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்மைப்புடன் செயலாற்றுவதற்கு ஐக்கிய இராச்சியம் அரசாங்கத்தை வலியுறுத்தியது. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் “சிங்களக் குடியேற்றமயப்படுத்தல்” பற்றிய கரிசனைகளை தமிழ் தேசியக் கூட்மைப்பு மற்றும் சிவில் சமூகங்கள் என்பன தெரிவித்தன. தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இடங்களின் பெயர்களை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மாற்றுதல், பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல், மற்றும் தென் பகுதி நிர்மாணவியலாளர்கள், ஒப்பந்தக்கார்ர்கள் மற்றும் வியாபாரங்கள் என்பவற்றுக்கு சார்பாக பாரபட்சப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தன. ஐந்து வருடங்களினுள் நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்டிருப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை பொலிஸ் அறிவித்தது. சமூகமயப்படுத்தப்பட்ட பொலிசை முன்னேற்றுவதற்கும் மற்றும் இலங்கைப் பொலிசுக்கு தமிழ் மொழிப் பயிற்சியை வழங்குவதற்குமான ஒரு வேலைத் திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியம் உதவியளித்தது.

சிறுவர் உரிமைகள்

சிறுவர் உரிமைகள் மீதான சமவாயத்திற்கு இலங்கை ஒரு தரப்பாகும் என்பதோடு, சிறுவர் இறப்பு வீதம், தாய் ஆரோக்கியம் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பிலான புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை எட்டுவது நோக்கி கணிசமான முன்னேற்றங்களையும் அது ஏற்படுத்தியுள்ளது. முறைதகாப் பாலுறவு மற்றும் சுரண்டல் உட்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் ஒரு பிரச்சினையாக இன்னமும் உள்ளது. 2013 இன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களின் ஒரு அதிகரிப்பை அரச சார்பற்ற ஸ்தாபனங்கள் அவதானித்துடன். சில சமூகங்களில் பால்ய விவாகமும் தொடர்கிறது. ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மத ஆசிரியர்கள் ஆகியோர்களால் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள், அதே போன்று அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட சிறுவர் பாலியல் வல்லுறவுகளின் அதிகரித்த சம்பவங்கள் பற்றி கிரமமாக அறிக்கைகள் கிடைத்த வண்ணம் உள்ளன. சிறுவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தம் பொறிமுறைகள், மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை என்பவற்றைத் தடுத்தல் என்பன வலுப்படுத்தப்படல் வேண்டுமென ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) கூறியது.

ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினர் மற்றும் மாற்றுப் பால்செயலினர் (LGBT) உரிமைகள்

இலங்கைச் சட்டத்தின் கீழ் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமாக உள்ளது. கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மே மாதத்தில் ஓரினச்சேர்க்கை விரோதத்திற்கு எதிரான சர்வதேச தினத்தைக் குறிக்கும் முகமாக, ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினர் மற்றும் மாற்றுப் பால்செயலினர் சமூகத்தினருக்கான உரிமைகளை நாடும், ஈக்குவல் கிறவுண்ட் (Equal Ground ) ஒரு இலாப நோக்கற்ற ஸ்தாபனத்திற்கு ஒரு காசோலையை வழங்கியது. தொல்லைப்படுத்தப்படுதல்கள் தொடர்பான கரிசனைகளை எழுப்பியதன் மூலமாக உயர் ஸ்தானிகராலயமும் ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினர் மற்றும் மாற்றுப் பால்செயலினர் சமூகத்தினர் உரிமைகளுக்கு ஆதரவளித்தது.

வெளியிடப்பட்ட தேதி 14 May 2013
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது 17 April 2014 + show all updates
  1. Updated with 213 HRD Report

  2. Latest quarterly update has been added.

  3. added the latest quarter update

  4. First published.