பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கண்டிக்கு விஜயம்
மலைநாட்டுக்கான தனது பரந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரான்கின், நவெம்பர் 3, 2014 அன்று கண்டிக்கு விஜயம் செய்தார்.
அவர் புனித தந்தக் கோயிலுக்கு தனது மரியாதைகளைச் செலுத்தியதுடன், மல்வத்தை பீட தலைமைக் குரு வணக்கத்துக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தர்த்த சுமங்கல மகாநாயக்க தேரோ மற்றும் அஸ்கிரிய பீடத்தின் வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ தம்மாதசி ரத்னபால புத்தரகிட்ட மகாநாயக்க தேரோ அவர்களையும் சந்தித்தார். கடந்த வருடம் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைமைகள் மாநாட்டின் போது முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் அவர்களை வரவேற்றமைக்காக மகாநாயக்கர்களிற்கு அவர் நன்றி கூறினார். அத்தோடு அவர் மத ஒற்றுமையின் முக்கியத்துவம் மற்றும் அனைத்து நாடுகளிலும் மதச் சமூகங்களுக்கிடையில் பொறுமை மற்றும் மதித்து நடத்தல் என்பவற்றுக்கான தேவை பற்றியும் கலந்துரையாடினார்.
உயர் ஸ்தானிகர், கரிசன் மயானம் மற்றும் கண்டியிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகங்களுக்கும் விஜயம் செய்தார். முதலாம் உலகப்போர் ஏற்பட்ட நூறாவது ஆண்டில், பொதுநலவாய யுத்த மயானத்தில் புதைக்கப்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் முகமாக, அங்கு ஒரு மலர்வளையத்தையும் வைத்து அஞ்சலி செலுத்தினார்.