ஐக்கிய இராச்சிய நுழைவிசைவு விண்ணப்பதாரிகள் மோசடி செய்தமைக்காக கைது
ஐக்கிய இராச்சியத்துக்கான நுழைவிசைவுக்காக ஒன்றாக விண்ணப்பித்த திருமணமான இலங்கைத் தம்பதிகள், தங்களது விண்ணப்பங்களில் மோசடி வேலையைப் பிரயோகித்தமை மற்றும் தங்களது கடவுச் சீட்டுகளில் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் மோசடியான மாற்றங்களை மேற்கொண்டமை என்பவற்றுக்காக நேற்று கைது செய்யப்பட்டனர்.
விண்ணப்பதாரிகள் ஐக்கிய இராச்சியத்தின் நுழைவிசைவு மற்றும் குடிவரவு அதிகாரிகளால் கொழும்பிலுள்ள மோசடிப் புலன்விசாரணைப் பொலிஸ் பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டனர். இந்த நுழைவிசைவு விண்ணப்பதாரிகள் தங்களது கடவுச் சீட்டில் முன்னம் இடப்பட்டிருந்த ஐக்கிய இராச்சிய அனுமதி மறுப்பு முத்திரையை மறைப்புச் செய்வதற்கு முயற்சித்திருந்ததுடன் தங்களது விண்ணப்பத்தில் முன்னர் மறுதலிக்கப்பட்டதை மறுத்தும் இருந்தனர். இந்த இரண்டு நுழைவிசைவு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் இருவரும் ஐக்கிய இராச்சியத்திற்கு 10 வருடப் பயணத் தடையையும் கொண்டிருப்பார்கள். இதற்கு மேலதிகமாக, தங்கள் நடவடிக்கைகளுக்காக அவர்கள் இப்பொழுது இலங்கை அதிகாரிகளிடமிருந்து வழக்குத்தொடர்தல் நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுப்பர்.
ஐக்கிய இராச்சிய நுழைவிசைவு மற்றும் குடிவரவு நடவடிக்கைகள் முகாமையாளர், டொனி வில்லியம், தெரிவித்ததாவது:
“ஐக்கிய இராச்சியத்தின் குடிவரவு விதிகளின் துஷ்பிரயோகித்தலை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். துஷ்பிரயோகங்களை எங்கு நாம் காண்கிறோமோ, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மோசடி ஆவணங்களையோ அல்லது வேறு வடிவிலான ஏமாற்றுதல் வேலைகளைச் சமர்ப்பிக்க வேண்டாமென நுழைவிசைவு விண்ணப்பதாரிகளுக்கு நான் கடுமையாக அறிவுறுத்துவேன்.”
நுழைவிசைவு விண்ணப்பதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மீது தீவிரமான பரிசோதணைகளை பயிற்றுவிக்கப்பட்ட மோசடிகள் தொடர்பான அதிகாரிகள் மேற்கொள்வதால், ஐக்கிய இராச்சியத்தின் நுழைவிசைவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அணி இந்த ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்துள்ளனர்